திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு!!
திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பு மாநகரசபையின் நகர மண்டபத்தில் (10) திகதி இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.தன்ஞ்சயன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் நிருவாக உத்தியோகத்தர், மாநகர சபையின் பொறியியலாளர், கணக்காளர், கால்நடை வைத்தியதிகாரி உட்பட வளவாளர்களாக பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வை நடாத்தியிருந்தனர்.
இச்செயலமர்வின் போது பொதுமக்களின் வீடுகளில் சேரும் கழிவுப் பொருட்களை எவ்வாறு சேதனைப்பசளையாக்குவது, வீடுகளில் சேரும் கழிவுப் பொருட்களை எவ்வாறு தரம் பிரித்து வழங்குவது தொடர்பாகவும், திண்ம கழிவு முகாமைத்துவத்தின் போது ஏற்படும் சவால்கள் தொடர்பாகவும் இச்செயலமர்வில் விழிப்புணர்வு கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டது.
இக்கருத்தரங்கின் நிறைவில் வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களை கொண்டு சேதனைப் பசளையை உற்பத்தி செய்வதற்கான உபகரணம் தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு மாநகர ஆணையாளர் மற்றும் மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே.ஜெகன்நாத் ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுப் பொருகள் சேர்வதை குறைப்பதற்காகவே பொதுமக்களுக் இவ்விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.