மட்டக்களப்பு - கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!


மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் இன்று (29) திகதி நிறைவுபெற்றது. 

கடந்த 20 ஆம் திகதி ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதனைத் தொடர்ந்து நற்கருனை ஆராதனை நடைபெற்றது.

இன்று (29) திகதி காலை 7.00 மணிக்கு மன்னார் மறை மாவட்ட இயேசு சபை துறவி அருட்தந்தை அன்ரனி ரொபர்ட் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான ஆலய திருவிழா இனிதே நிறைவடைந்துள்ளது.

இத்திருவிழா கூட்டுத் திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட இயேசு சபை துறவிகளான அருட்தந்தை ரொசான் அடிகளார், அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளார் உட்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பங்குமக்கள் மற்றும் அயல்பங்கு மக்கள் என அதிகளவிலானோர் கலந்துகொண்டனர்.









திருவிழா திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச் சொரூப ஆசிருடன் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை டொம்போலா விளையாட்டுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Powered by Blogger.