மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வகட்சி இளைஞர் உரையாடல் - ஆர்வத்துடன் கேள்விக்கணைகளை தொடுத்த இளைஞர்கள்!!

இளைஞர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தலும், ஜனநாயகத்தை வளர்த்தலும் எனும் தொனிப்பொருளில் Coalition for Inclusive Impact (CII) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பிரமுகர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.

CII நிறுவனத்தின் பிரதிநிதி சட்டத்தரணி கார்த்திகா ஆதித்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் சார்பாக அவரின் இணைப்பாளர் தேவஅதிரன் மற்றும் பேராசிரியர் சந்திரா மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரகலயின் பின்னரான தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வாக்காளர்களுக்கும், அரசியற் பிரதிநிதிகளுக்கும் இடையில் குறைந்து வரும் சமூக ஒப்பந்தத்தை நிவர்த்தி செய்யும் முகமாக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், இளைஞர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தல், தேர்தல் முறைமையில் குறைவான பிரதிநிதித்துவக் குழுக்களைச் சேர்ப்பதை வலுப்படுத்தல், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்ளைத் தெரிவுகள் பற்றிய புரிதலை அதிகரித்தல், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கரிசனங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அரசியல் அறிக்கைகளைத் தயாரிக்க ஊக்குவித்தல், மேலும் தகவலறிந்த மற்றும் உள்ளடக்கிய ஜனநாயகத்தை வளர்த்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதில் CII நிறுவனம் சார்பாக சர்வ கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைப் பரிமாறியதுடன், மக்கள் பிரதிநிதிகளிடம் பலவாறான கேள்விகளையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















Powered by Blogger.