செந்திலின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் நீதிமன்ற தலையீட்டால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை  தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாயிற்கு மேலதிகமாக வழங்க வேண்டுமென  இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில்  பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து இருந்தனர். ஏனைய சமூகத்தினருக்கு  5000 கொடுப்பனவு வழங்கிய போதும் பெருந்தோட்ட மக்கள் அரச அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வேலைக்கு செல்வதாகவும், அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அப்போதைய பிரதமரின் இணைப்பு செயலாளராக இருந்த  செந்தில் தொண்டமான், இப்பிரச்சினை குறித்து  அப்போதைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று, 5000 ரூபாயிற்கு மேலதிகமாக வழங்குவதற்கான நியாயமான அரச ஆவணங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து, இந்த நிவாரண தொகையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன் பல முறை கலந்துரையாடி   மலையகம் முழுவதும் குறித்த தொகையை இடைக்கால நிவாரணமாக செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 1700 ரூபாய் சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபாயிற்கு மேலதிகமாக வழங்க  மாவட்டம் வாரியாக  தொழிலாளர்களின் பட்டியல், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை, தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கை என அனைத்து ஆவணங்களை செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். 

அதற்கமைய செந்தில் தொண்டமானின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யுமாறு   சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் 1700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போது உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.



Powered by Blogger.