மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!!


மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் சந்திவெளி கோரக்கள்ளிமடு பகுதியில் கனரக வாகனுத்துடன் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்துச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாகவும் சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை சுங்கான்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய சண்முகதாஸ் அன்புதாஸ், மற்றும் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வடிவேல் தர்மராஜ் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாகவது,
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் சந்திவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு 9 மணியளவில் வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் நிறுத்துமாறு சைகைகாட்டியபோது நிறுத்தாது அங்கிருந்து வேகமாக தப்பி ஓடியபோது வீதியில் எதிரே சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கனரக வாகன சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(கனகராசா சரவணன்)

Powered by Blogger.