மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்காட்சி மட்டக்களப்பில் ஆரம்பம்!!


மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியமும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும் இணைந்து நடத்துகின்ற மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்வியலை பிரதிபலிக்கின்ற புகைப்பட மற்றும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி இன்று (15) திகதி  மட்டக்களப்பு - ஊரணி அமெரிக்கன் மிஷன் வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அமெரிக்கன் சிலோன் மிசனின் கிழக்கு பிராந்திய குருமுதல்வர் அருட்பணி எம்.லூகேயோன் அடிகளார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி.என்.சிவலிங்கம் கலந்து சிறப்பித்திருந்தார்.

அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து  கண்காட்சி கூடங்கள் அதிதிகளினால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கண்காட்சி கூடங்களில் மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்வியலை பிரதிபலிக்கும் ஆய்வாளர் எஸ்.கிஷோகுமாரினால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், இவற்றை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு இக்கண்காட்சியினை கண்டுகளித்திருந்தனர்.

இன்று (15) திகதி ஆரம்பித்தவைக்கப்பட்ட கண்காட்சியானது நாளை மற்றும் நாளை மறுதினமான 16ம் மற்றும் 17ம் திகதிகளில்  காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெற உள்ளதுடன், இன்றைய ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கரீத்தா ஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருப்பணி அழகுதுரை யேசுதாசன், பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வ மத ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.




















Powered by Blogger.