பாடு மீன் கிரிக்கெட் சமரின் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது வின்சன்ட் உயர்தர பாடசாலை!!


10 வது பாடு மீன் கிரிக்கெட் சமரின் சம்பியன் கிண்ணத்தை வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர் சுவிகரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள பரபல  பாடசாலைகளான புனித சிசிலியா மகளீர் கல்லூரி அணியினருக்கும் வின்சன்ட்  உயர்தர மகளீர் தேசிய பாடசாலை அணியினருக்கும் இடையில் சிநேகபூர்வமாக தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் பாடுமீன் கிரிக்கெட் சமர் இம்முறை 10 வது தடவையாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

புனித சிசிலியா மகளீர் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட T 20 மென்பந்து பாடுமீன் கிரிக்கட் சமரில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இளந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து 157 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்ட புனித சிசிலியா மகளீர் கல்லூரி அணியினர் 7 விக்கட்டுக்களை இழந்து 20 ஓவர்கள் நிறைவில் 153 ஓட்டங்களை பெற்ற நிலையில்  வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர் 3 ஓட்டங்களால் வெற்றியை தமதாக்கியுள்ளனர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்.

இச்சமரின் சிறந்த பெண் வீராங்கனையாகவும் சமரின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாகவும் வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை அணியின் தலைவி சானுஜா கமலேஸ்வரன் தெரிவாகியதுடன், 

சமரின் சிறந்த பந்துவீச்சாளராக சிசிலியா பெண்கள் கல்லூரியின் வீராங்கனை ஈ.மெருஷா தெரிவாகியதுடன் இவர்களுக்கான கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த வின்சன்ட் அணியினருக்கும், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட சிசிலியா அணியினருக்குமான பணப்பரிசில் உள்ளிட்ட வெற்றி கிண்ணங்கள் இதன்போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஆட்டத்தின் இறுதி பந்துவீச்சு இடம்பெற்று போட்டி முடிவுறமுன்னதாக மைதானத்திற்குள்  ஆதரவாளர்கள் உள் நுழைந்ததால் குளப்ப நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி தவ திருமகள் உதயகுமார், இரண்டு பாடசாலைகளின் பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றேர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.































Powered by Blogger.