மட்டக்களப்பில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்களில் சிரமதானம்


மட்டக்களப்பில் டெங்கு பரவலினைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்களில்  சிரமதான நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தினைச் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று (07) திகதி ஈடுபட்டனர். 

அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை வழிகாட்டலின்கீழ் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணனின் தலைமையில் இச்சிரமதானத்திற்கான திட்டமிடல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதனடிப்படையில் கோட்டை வளாகத்தின் சுற்றுப்புறங்கள், நீர்த்தடாகம், வாவிக்கரைப்பகுதி உட்பட்ட இடங்களில் காணப்படும் நீர்தேங்கும் கொள்கலன்கள் அகற்றப்பட்டன.

மேலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்றிக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு முறையாக அகற்றப்பட்டதுடன், சுற்றுப்புறச்சூழல் அழகுபடுத்தும் நடவடிக்கையும் இதன்போது உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது. 

இதேபோன்று மாவட்டத்தின் அனைத்து அரச அலுவலகங்களிலும் சிரமதான நடவடிக்கைகள் கிரமமாக இடம்பெற ஆலோசனை கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













Powered by Blogger.