காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லா!


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள்  கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடம் ஏற்ப்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS GRADE 1) தகுதியை கொண்ட M.M.கலாவுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) படிப்பை நிறைவு செய்திருந்த A.G.மொஹமட் ஹக்கீமுக்கு கோட்ட கல்வி அலுவலகர் நியமனம் வழங்கப்பட்டு,தற்காலிக அதிகாரியாக நியமிக்கப்பட்ட M.M.கலாவுதீனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் M.M.கலாவுதீனுக்கு 58 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால் இவரின் வயதை அடிப்படையாக கொண்டும், மனிதாபிமான ரீதியிலும் அருகில் உள்ள ஒரு பாடசாலையில் நியமனம் வழங்க வேண்டுமென ஹிஸ்புல்லா, ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை ஏற்று, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்கவிடம் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து, கலாவுதினை அருகில் உள்ள பாடசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன், கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடமாற்றத்திற்கான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் உறுதியளித்தார். 

நசீர் ஹகமட் ஒரு அமைச்சரவை அமைச்சராக இருந்தும் அவரால் செய்ய முடியாத விடயத்தை , எவ்வித அரச பதவியுமின்றி ஹிஸ்புல்லா நாகரீகமான முறையில்  செய்து முடித்துள்ளமை வரவேற்கதக்கதென பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

நாகரீகமான முறையிலும் மனிதாபிமான முறையிலும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரி்க்கைகள் முன்வைக்கப்பட்டால் சட்டத்திட்டங்களுக்கு அமைய அவர் உரிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும், அரட்டல் மிரட்டல்களுக்கு அவர் ஒரு போதும் அடிப்பணிய மாட்டார் என்பதற்கு இந்த செயற்பாடும், அவருடைய  கடந்தகால அரசியல்   செயல்பாடுகள் எடுத்துக்காட்டு எனவும் பல அமைப்புகள் கருத்துக்கள்  வெளியிட்டுள்ளன. 

Powered by Blogger.