வெடுக்கு நாறி மலையில் மீண்டும் சிலையை வைக்க யாருடைய அனுமதியும் தேவை இல்லை – அமைச்சர் டக்ளஸ்


(கனகராசா சரவணன்)

வெடுக்கு நாறி ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப்பது தவறு. யார் செய்திருந்தாலும் தவறு. மீண்டும் வெடுக்கு நாறி ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும். அதற்கு ஆளுநருடையதோ பிரதமருடைய அனுமதியோ பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்திய வீதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற கட்சி காரியாலய திறப்பு விழாவில் கட்சி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்பிராய பூர்வமாக காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளை தனிப்பட்ட முறையில் அழைத்த போது ஒரு கட்சியை தவிர ஏனைய எதிர்கட்சிகள் தேர்தல் வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக யாரும் செயற்படமாட்டர்கள்.

1990 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை புலிகள் எதிர்த்தனர். ஆனால், நாங்கள் இதன் ஊடாக பிரச்சனையை தீர்க்க முடியும் என தெரிவித்தோம். அதனை மறுத்து துரோகத்தனம் என்றனர். இன்று என்ன நடந்தது. தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்ற மாதிரி நடந்திருக்கின்றது.

நானும் 30 வருடமாக நாடாளுமன்றத்தில் இருந்து வருவதால் எனக்கும் அங்கிருக்கும் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளும் புறமும் தெரியும். எனவே பொருத்தமான நிலையில் தேர்தல் வரும். உரிய நேரத்தில் தேர்தல் நடாத்தப்படும்.

அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் உலகத்திலே எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் இருக்கின்றது. ஆனால் பெயர்கள் வித்தியாசப்படலாம். இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று அந்த நிலமை இல்லை. ஆனால் நாட்டை நிர்வகிப்பதற்கு சட்டம் தேவை.

எனவே, இது புதிதானதல்ல. ஆளும் கட்சிகள் எதாவது ஒன்றை செய்யும் போது எதிர்க்கட்சிகள் எதிர்பதுதான் இங்குள்ள யதார்த்தம் அந்தவகையில், எதிர்கட்சிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவிர, இந்த சட்டத்தில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், இந்த பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் நாட்டிற்கு தேவை.

அதேவேளை, நீண்டகாலமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச்சட்டமூலமான மாகாணசபை முறைமை ஊடாகத்தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என நீண்டகாலமாக நான் சொல்லி வருகின்றேன். அப்போது தமிழ்கட்சிகள், இயக்கங்கள் அதனை எதிர்த்தது. ஆனால் இன்று அவர்களும் அதற்கு ஆதரவாக இருக்கின்றனர். அந்தவகையில், ஜனாதிபதி ஏற்கனவே அதனை விளங்கியிருப்பதால் அதனை முன்வைத்துள்ளார். அது வரவேற்க கூடியது.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் றோலர் படகுகளில் அத்துமீறி புகுந்து மீன்படிக்க அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெளிவாக தெரிவித்துள்ளார் என்றார்.


Powered by Blogger.