மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!!


மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் நடாத்தும் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பத்மநாபா மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் இந்த சுற்றுப்போட்டியை நடாத்துகின்றது.

இதன்போது மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்திற்கும் பத்மநாபா மக்கள் முன்னணிக்கும் இடையில் குறித்த சுற்றுப்போட்டியை நடாத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் தலைவர் பாலராஜா செல்வராஜா, பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் செயலாளர்  பத்மராஜா கோபிராஜ்,  பொருளாளர்  த.ரஜினிகாந்த், மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மா.உதயகுமார், பத்மநாபா மக்கள் முன்னனியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆராயும் கூட்டமும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தினை தேசியம் தாண்டி சர்வதேசம் வரையில் புகழ்பெறுவதற்கு இந்த சுற்றுபோட்டி வழிசமைக்கும் என மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் பொருளாளர் த.ரஜினிகாந்த் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பத்மநாபா சவால் கிண்ணத்தை நடாத்துவதையிட்டு அக்கழகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஜேகநாதன் வினோகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த இளம் வீரர்களை உருவாக்குவதற்கான ஆரம்ப களமாக இந்த போட்டிகள் இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தினால் நடாத்தப்பட்ட சவால் கிண்ணமானது, மீண்டும் இவ்வாண்டு (2023) பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு பத்மநாபா மக்கள் முன்னனியின் 12 இலட்சம் ரூபாய் நிதி அனுசரனையுடன் எதிர்வரும் 13.05.2023 திகதி வெபர் விளையாட்டரங்கில்  ஆரம்பிக்கப்பட்டு மிகக் கோலாகலமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.