பறவைகள் தற்கொலை செய்துகொள்ள வரும் இந்திய கிராமம்..! விலகாத மர்மம்..

 இந்தியாவின் அநேக பகுதிகளுக்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பறவைகள் இடம்பெயர்ந்து வந்து சுகமான வெப்பநிலையை அனுபவித்து இனப்பெருக்கம் செய்துவிட்டு போகிறது. மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு இமயமலை பகுதிகளில் இதை அதிகம் காணலாம். ஆனால் இந்தியாவின் ஒரு கிராமத்திற்கு பறவைகள் தற்கொலை செய்து கொள்ளவே வருகின்றதாம். கேட்க வியப்பாக இருக்கும். ஆனால் இது தான் உண்மை.



அஸ்ஸாமில் உள்ள டிமா ஹசாவோ மாவட்டத்தில் ஜதிங்கா என்ற ஒரு சிறிய பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு தான் ஆண்டின் சில வாரங்களில் மட்டும் வெளி ஊர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பறவைகளின் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கின்றன.

ஏன் அந்த குறிப்பிட்ட காலத்தில் இங்கே பறவைகள் வருகிறது? என் வினோதமாக நடந்துகொள்கிறது? ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறது என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் பறவையியல் வல்லுநர்கள் என்று பலரும் ஆராய்ச்சி செய்து விட்டனர். ஆனால் இதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. யூகங்கள் மட்டுமே மிஞ்சிருக்கிறது.

அசாம் ஹஃப்லாங்கிலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் உள்ள ஜதிங்கா ஒரு இயற்கை எழில் கொஞ்சும் கிராமமாகும். பறவைகள் புலம் பெயரும் பாதையில் அமைந்துள்ள ஜதிங்காவிற்கு செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் வரும் பறவைகள் தான் தற்கொலை செய்து கொள்கின்றன. அதுவும் சொல்லி வைத்தாற்போல் இந்த மாதங்களின் மாலை 6 மணி 10முதல் மணி வரையிலான நேரத்தில் தான் பறவைகள் மடிகின்றன. உள்ளூர் மக்கள் இதற்கு அங்குள்ள தீய சக்தி தான் காரணம் என்று கருதுகின்றனர்.

ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களுக்கு இடையில், பறவையியல் வல்லுநர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள், புலம்பெயர்ந்த பறவைகள் அவற்றின்  மரணத்தைத் தூண்டும் நிகழ்வைக் காண ஜடிங்காவிற்கு வருகை தருகின்றனர். இந்த நிகழ்வானது கிராமத்தின் குறிப்பிட்ட 1.5 கிமீ வட்டத்திற்குள் தான் நிகழ்கிறது.

அங்கே சுற்றி காடு, நதி, அதீத மூடுபனி இருப்பதால் மூடுபனியில் திசை அறியாமல், வழி மறந்து, கவனச் சிதறல் ஏற்பட்டு இறந்துவிடுவதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். ஒரு சிலர் இந்த குளிர், பனி, நதி வெள்ளம் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிடுவதாக தெரிவிக்கின்றனர்.

உள்ளூர்வாசிகள் மலை உச்சியில் அதிக சக்தி வாய்ந்த தேடல் விளக்குகளை இயக்குகிறார்கள். இது இரவில் பறக்கும் பறவைகளை ஈர்க்கிறது. ஒளியை நோக்கிச் செல்லும் பறவைகள் இடையில் இருக்கும் மூங்கில் கம்புகளுடன் மோதி இறப்பதாக சொல்கின்றனர். ஆனால் அதிலும் நீண்ட தூரம் பயணித்து வரும் பறவைகள் இதில் சிக்குவதில்லை. அருகாமையில் இருந்து வரும் பறவைகளே இப்படி விளக்கு வெளிச்சத்தால் அடிபட்டு இறந்துவிடுகிறது

இதை குறைக்க பறவையியலாளர்கள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாவலர்கள் உள்ளூர் மக்களுக்கு கல்வி கற்பித்து கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளனர். இதனால் சில மரணங்கள் குறைந்தாலும் இன்றும் அந்த தற்கொலை நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் உலகத்தில் இப்படி பறவைகள் தற்கொலை நடக்கும் இடம் இது மட்டுமல்ல. பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளிலும் நிகழ்கிறது.

ஜதிங்கா பறவைகள் ஆர்வலர்களுக்கு சிறந்த இடம் என்றே சொல்லலாம். பல தேசங்களில் இருந்து புலம்பெயரும் பறவைகளை இங்கே காணலாம். ஜதிங்காவியில் பறவைகள் கண்காணிப்பு மையம் உள்ளது. ஹஃப்லாங்கில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்துக்கொண்டு இங்கே தங்கலாம்.

ஒருநாள் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக திகழும். அசாமின் முக்கிய நகரமான கவுகாத்தியில் இருந்து 310 கிமீ தொலைவில் உள்ளது. ஹஃப்லாங்கில் இருந்து வாடகை வண்டி  மூலம் இந்த கிராமத்தை அடையலாம்.

Powered by Blogger.