வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை! கோட்டாபய அரசாங்கம் அறிவிப்பு






நாடளாவிய ரீதியிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு கட்சி பேதமின்றி நியமனங்களை வழங்கவுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அனைத்து பட்டதாரிகளையும் அவர்கள் பட்டங்களை பெற்றுக் கொண்ட வருடங்களுக்கமை இணைத்துக் கொள்வதற்கான செயற்திட்டமொன்றையும் முன்னெடுப்பதாக கூறியுள்ளார்.










ஊடக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,





கடந்த காலங்களில் வேலையில்லாப் பட்டதாரிகள் நியமனங்களை பெற்றுக் கொள்வதற்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.





எமது ஆட்சியில் இவ்வாறு இல்லாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கமைய 54 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.





நாடளாவிய ரீதியில் சிறு சேவையாளர்களை இணைத்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளோம். அதற்காக கிராம மட்டத்தை அடிப்படையாக கொண்டு சிறு சேவையாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக விசேட செயற்திட்டமொன்றையும் எதிர்வரும் வருடத்தில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.





ஊடகவியலாளர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் , அதற்காக எதிர்வரும் தினங்களில் விசேட செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன. ஊடகவியலாளர்களின் தொழிற்தகைமையை விருத்தி செய்யும் நோக்குடன் தேசிய பயிற்சி மத்தியநிலையமொன்றையும் அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.





ஊடகவியலாளர்களுக்கான குடியிருப்பு தொகுதி அமைப்பது மற்றும் வாகனங்களை பெற்றுக் கொள்வதற்கான கடன்வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என இதன்போது தெரிவித்தார்.


Powered by Blogger.